தனக்கு அரசுப் பள்ளியில் சமையலர் பணி வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளி பெண் கணவருடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார். முன்னதாக, திடீரென போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
விழுப்புரம் அருகே உள்ள ப.வில்லியனூரைச் சேர்ந்த சரவணன் மனைவி தங்கராணி(36). மாற்றுத் திறனாளியான இவர், திங்கள்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது அங்கிருந்த போலீஸார், அவர்களை அப்புறப்படுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, குறைதீர் நாள் கூட்டத்தில் தங்கராணி மனு அளித்துக் கூறியதாவது: ப.வில்லியனூர் கிராமத்தில் ஏழை கூலித்தொழிலாளியான கணவர் சரவணனுடன் வசித்து வருகிறேன். கடந்த 2013-இல் நேரிட்ட விபத்தில், கால்கள் பாதிக்கப்பட்டு 60 சதவீதம் மாற்றுத் திறனாளியாக உள்ளேன். கடன் வாங்கி எனக்கு மருத்துவம் பார்த்ததால், மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
இந்த நிலையில், ப.வில்லியனூர் ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளியில் சமையலர் பணிக்கு கடந்த 2011-இல் விண்ணப்பித்திருந்தேன். வேலை கிடைக்கவில்லை. அரசியல் கட்சியினர் சிலர் பணம் வாங்கிக்கொண்டு உறுதியளித்து ஏமாற்றிவிட்டனர். தற்போது, அந்தப் பள்ளியில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு மாற்றுத் திறனாளி முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.