லஞ்ச வழக்கில், ஓய்வு பெற்ற நில அளவை ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மாவட்ட ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுச்சேரி அருகே உள்ள முத்தரையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், 2014-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் 6 வீட்டுமனைகளை வாங்கினார். அவற்றை பட்டா மாற்றம் செய்ய, வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இவரது வீட்டு மனைகளை அளந்து, பட்டா மாற்றம் செய்து சான்றிதழ் வழங்குவதற்காக, வானூர் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவு ஆய்வாளர் வாசு லஞ்சமாக ரூ.30 ஆயிரம் கேட்டாராம். மேலும், முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்தால் வேலையைத் தொடங்குவதாகவும் அவர் சுரேஷிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவில் சுரேஷ் புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுரைப்படி, ரூ.10 ஆயிரத்தை சுரேஷ் கொடுத்த போது, போலீஸார் வாசுவை கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி மோகன் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். நில அளவை செய்து, வீட்டுமனை பட்டா வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவை ஆய்வாளர் வாசுவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, பணியிலிருந்து ஓய்வுபெற்ற வாசுவை (60) ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.