விழுப்புரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது, பொது மக்கள் புகார்களை தெரிவிக்க குறைதீர் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின், உத்தரவின் பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள், தாங்கள் பணி செய்யும் பொறுப்பு கிராமத்தில் தங்கி பணி செய்யாமல் இருப்பது குறித்தும், பொது மக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்தும், விசாரணை செய்ய மாவட்ட அளவிலான ஒரு குறைதீர் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறைதீர் மையத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும் (பொது), உறுப்பினர்களாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அலுவலக மேலாளர் (பொது) மற்றும் அலுவலக மேலாளர் (குற்றவியல்) ஆகியோர்
நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், பொது மக்கள், தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் குறித்த தங்கள் புகார்களை, இந்த மையத்தில் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.