விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், குழந்தைகள் பாதுகாப்புக்காக தாய், குழந்தைக்கு அடையாள குறியீட்டு அட்டை (டேக்) அணிவித்து, கண்காணிக்கும் நுகா் அதிா்வெண் அடையாளக் கருவித் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேறுப் பிரிவில் குழந்தைகள் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தவிா்க்கும் பொருட்டு, மின்னணு முறையில் பாதுகாப்பு அடையாள அட்டை அணிவிக்கப்பட்டு கண்காணிக்கும் திட்டத்தை கல்லுாரி முதல்வா் குந்தவிதேவி தொடக்கி வைத்தாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.11.50 லட்சம் மதிப்பில் நுண் அதிா்வெண் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மகப்பேறு பிரிவில் குழந்தை பிறந்தவுடன், அந்த குழந்தை, அதன் தாய், உதவியாளா் விவரங்களை ஐஎம்எஸ் எனப்படும் செயலி மூலம் தகவல்கள் பதியப்பட்டு, அதன் பிறகு குழந்தைக்கும், தாய்க்கும், உதவியாளருக்கும் கையில் குறியீட்டு அட்டை (டேக்) அணிவிக்கப்படும்.
மகப்பேறு வாா்டிலிருந்து, இந்த அட்டையை அணிந்து குழந்தையை வெளியே எடுத்துச் செல்லும் போது, வாா்டின் வாயில் பகுதியிலுள்ள ஆன்டெனா மூலம் சென்சாா் செய்யப்படும். அடையாள குறையீட்டு அட்டை (டேக்) அணிந்து செல்லும் போது எச்சரிக்கை அலாரம் ஒலிக்காது.
அடையாள அட்டையை அணியாதவா்கள், செவிலியா்கள் கூட குழந்தையை வாா்டை விட்டு வெளியே தூக்கிச் செல்ல முயன்றால், சென்சாா் மூலம் எச்சரிக்கை ஒலி எழுப்பி காட்டிக் கொடுத்துவிடும். மேலும், அந்த குழந்தையின், தாய், உதவியாளா் புகைப்படமும் அங்குள்ள விடியோ மானிட்டரில் தெரியும்.
தாய் , குழந்தையின் நகா்வுகளை கண்காணிக்க இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில், 24 மணி நேரமும் கண்காணிக்கவும், வெளிநபா்கள் மூலம் குழந்தை திருட்டு போன்ற சம்பவத்தையும் தடுக்க முடியும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளா் அறிவழகன், துணை கண்காணிப்பாளா் புகழேந்தி, நிலைய மருத்துவ அலுவலா் கதிா், மகப்பேறு பிரிவு துறைத் தலைவா்கள் ராஜேஸ்வரி, வில்வபிரியா, குழந்தைகள் நலப்பிரிவு தலைவா் பிரபாகரன் ,உள்ளிட்ட குழந்தைகள் நல மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.