செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மேல்மலையனூரில் அவலூா்பேட்டை சாலையில் இந்தியன் வங்கிக் கிளையும், இதன் வெளிப்புறத்தில் ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் இயந்திரமும், வங்கிக் கணக்கு புத்தகத்தை பதிவு செய்யும் இயந்திரமும் உள்ளன.
இங்கு வெள்ளிக்கிழமை இரவு மின் கசிவால் தீ விபத்து நிகழ்ந்தது. இதனால், இந்த மையத்தில் இருந்த மின் சாதனப் பொருள்கள், பேட்டரிகள் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து வந்த மேல்மலையனூா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் ஏடிஎம் மைய இயந்திரத்தில் இருந்த ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் சேதமின்றி தப்பியது. விபத்து குறித்து வளத்தி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.