அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம்
உளுந்தூர்பேட்டை தொகுதியில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை தொகுதி கூத்தனூர், எலவனாசூர்கோட்டை, நெய்வனை, நன்னாவரம், சேந்தநாடு, நரிஒடை, பரிக்கல், அரசூர் ஆகிய இடங்களில் அதிமுக-வினர் முகாமிட்டு வாக்குச்சாவடி முகவர்களை கிராமங்கள் தோறும் நியமனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை வகித்து, வருகிற மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களின் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான இரா.குமரகுரு, மக்களவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர் எம்.பரமாத்மா, ஒன்றியச் செயலர்கள் ஜி.மணிராஜ், ஏ.ஆர்.செண்பகவேல், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் இரா.சாய்ராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வளர்மதி பாண்டியராஜ், நகர துணைச் செயலர் கஜேந்திரன் உள்பட அதிமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.