செஞ்சி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சென்னை அருகேயுள்ள அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செந்தில்குமார் (42). இவர், சென்னை விமான நிலையத்தில் வாடகைக் கார் ஓட்டுநராக உள்ளார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விமானநிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையில் இறக்கிவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். கார் செஞ்சிக்கோட்டை அருகே காப்புக்காட்டுப் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த தண்ணீர் டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.
காரை ஓட்டி வந்த செந்தில்குமார் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மீட்டுப் பணிகள் நடைபெற்றன. இது குறித்து செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.