விக்கிரவாண்டி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
விக்கிரவாண்டி பாரதி நகர், காட்டு நாயக்கன் தெருவில் வசித்து வரும் காட்டு நாயக்கன் சமூக மக்கள் ஏழுமலை, வெற்றிவேல் தலைமையில், தமிழ்நாடு காட்டு நாயக்கன் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தினருடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் அளித்த மனுவின் விவரம்:
விக்கிரவாண்டி பாரதி நகர் பகுதியில், காட்டு நாயக்கன் இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக நிரந்தர இடமின்றி, குடிசை போட்டு வசித்து வருகிறோம். எங்களுக்கு நாங்கள் வசிக்கும் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இதேபோல, சாதிச் சான்றிதழ் இல்லாத 21 பேருக்கு காட்டு நாயக்கன் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். இதுதொடர்பாக உரிய ஆவணங்களுடன், விக்கிரவாண்டி வட்டாட்சியரிடம், கோட்டாட்சியரிடமும் விண்ணப்பித்தோம். ஆனால், இதுவரை சாதிச் சான்றிதழும், இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்படவில்லை.
எங்களின் நிலையறிந்து, பிள்ளைகளின் கல்வி பாதிக்காத வகையில், இந்தக் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றித் தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.