புதிதாக உதயமான கள்ளக்குறிச்சி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தை மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைக்க சங்கராபுரம் பொதுசேவை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவித்த தமிழக அரசுக்கு, சங்கராபுரம் பகுதியில் உள்ள பல்வேறு பொதுசேவை அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.
இதையடுத்து, சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை வியாழக்கிழமை இரவு பொதுசேவை அமைப்பினர் நேரில் சந்தித்தனர். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மையப் பகுதியில் பெருந்திட்ட வளாகம் அமைக்க வேண்டும். அதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். தன்னிறைவு மாவட்டமாக கள்ளக்குறிச்சியை மாற்ற அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் இராம.முத்துக்கருப்பன், ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் வை.ஜனார்த்தனன், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் கோ.குசேலன், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்றச் செயலர் கதிரவன், வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.பிரகாசம், அரிமா மாவட்டத் தலைவர் ஜனனி மகாலிங்கம், ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் அ.முகமத்ரபி உள்ளிட்டோர் முதல்வருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.