விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியப் பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி, அரசூர் பகுதியில் அனைத்துக் கட்சியினர் சனிக்கிழமை கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகே உள்ள அரசூர் கூட்டுச் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக ஒன்றியச் செயலாளர் துரைராஜ் தலைமை வகித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் இளங்கோவன் தொடக்க உரையாற்றினார்.
காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலர் ரங்கதாஸ், அமமுக பேரவைச் செயலர் முருகானந்தம்,
இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டச் செயலர் குமார், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் நாராயணன், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, பாமக ஒன்றியத் தலைவர் முரளிகிருஷ்ணன், விவசாய சங்கத் தலைவர் பக்தவச்சலு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
திருவெண்ணெய்நல்லூர், முகையூர், திருநாவலூர் ஒன்றியங்களைச் சேர்ந்த பல கிராமங்கள் விழுப்புரத்துக்கு 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.
கள்ளக்குறிச்சிக்கு 85 கி.மீ தொலைவுக்கு செல்ல வேண்டும். இதனால், புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இந்த ஒன்றியங்களை இணைக்க உத்தேசித்துள்ள திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.