அவசர ஊர்தி ஓட்டுநர் கொலை வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் இருவர் சரண்
விழுப்புரம் அருகே அவசர ஊர்தி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இரு எதிரிகள் புதன்கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
விழுப்புரம் அருகே வடக்குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் இளவரசன் மகன் தினேஷ்குமார் (24). தனியார் அவசர ஊர்தி ஓட்டி வந்தார்.
கடந்த 6-ஆம் தேதி இவருக்கும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் டீ கடை நடத்தி வரும் முண்டியம்பாக்கம் காலனியைச் சேர்ந்த முருகையன்(45) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, முருகையன் மகன் ஆகாஷ், அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கியதில், தினேஷ்குமார் உயிரிழந்தார்.
இது குறித்து 9 பேர் மீது விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து முருகையன், அவரது மகன் ஆகாஷ், முண்டியம்பாக்கம் காலனியைச் சேர்ந்த கலையரசன், பார்த்திபன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முண்டியம்பாக்கம் காலனியைச் சேர்ந்த கோவில்பிள்ளை மகன் சுதாகர்(22), சிவா மகன் சிவநேசன்(25) ஆகியோர் விழுப்புரம் இரண்டாவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாரதி முன் புதன்கிழமை சரணடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.