ரிஷிவந்தியம் அருகே ஆள் கடத்தல் வழக்கில் 2 இளைஞர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ரிஷிவந்தியத்தை அடுத்த மூங்கிலான்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் ஆறுமுகம் (40). இவரை கடந்த 2-ஆம் தேதி கோமாளூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (45), பாசார் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (37), செல்வராஜ் ஆகியோர் வீட்டில் இருந்து அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், ஆறுமுகம் வீட்டுக்கு வராததால் அச்சமடைந்த அவரது தந்தை கணபதி, ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், முன்விரோத பிரச்னை காரணமாக ஆறுமுகத்தை சங்கர் தரப்பினர் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஆறுமுகத்தை மீட்ட போலீஸார், சங்கர், ஏழுமலை ஆகியோரை கைது செய்தனர். செல்வராஜை தேடி வருகின்றனர்.