விழுப்புரத்தில் மாவட்ட வனத் துறை சார்பில் சுற்றுப்புற காரணிகளை பாதுகாத்தல் குறித்து, உயிரிப்பல்வகைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்காக அண்மையில் நடைபெற்றது.
விழுப்புரம் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் தலைமை வகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
அனைத்து உயிர்களையும் பாதுகாக்க, ஒரு அமைப்பை ஏற்படுத்தி அரசு ஊழியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை நடவேண்டும். மூலிகைச் செடிகளை பாதுகாக்க வேண்டும். அனைத்து வன உயிர்களையும், பாதுகாத்து சுற்றுப்புறக் காரணிகளை மேம்படுத்த வேண்டும்.
இயற்கை சூழலை பாதுகாத்து பூமி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும். நமது பகுதியில் உற்பத்தியாகும் உணவை நாம் பகிர்ந்து பயன்படுத்த, உணவுப் பொருள்களை பொதுப் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். வேம்பு, கற்றாழை, மஞ்சள் உள்ளிட்ட மருத்துவ தாவரங்களை அதிகம் பயிர் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். நமக்கு சுத்தமான காற்று, மழை பெற அதிக மரங்களை நட வேண்டும். பல்லுயிர் பாதுகாப்புடன் இருப்பதற்கு இயற்கை சார்ந்த கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டுமென்று, கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.