மரக்காணம் வட்ட வருவாய்த் தீர்வாய முகாம் (ஜமாபந்தி) நிறைவு நாளில் 1,254 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மரக்காணம் வட்டத்தில் வருவாய்த் தீர்வாய முகாம், ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெற்றது. வருவாய்த் தீர்வாய அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். கிராம வருவாய் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டது. முகாமில், 1254 மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களிடம் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டன.
வருவாய் தீர்வாய முகாம் நிறைவு நாள் விழா, மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மரக்காணம் வட்டாட்சியர் தனலட்சுமி வரவேற்றார்.
வருவாய் தீர்வாய அலுவலரான, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், 114 பேருக்கு பட்டா மாற்றம் சான்றிதழ், 314 பேருக்கு வீட்டுமனை பட்டா, 419 பேருக்கு நத்தம் பட்டா நகல், 356 பேருக்கு சிறு குறு விவசாய சான்றிதழ், 10 பேருக்கு முதியோர் உதவித் தொகை , 40 பேருக்கு குடும்ப அட்டை, ஒருவருக்கு வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதிச் சான்று என மொத்தம் 1,254 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில், வருவாய்த் தீர்வாய மேலாளர் உஷா, வட்டாட்சியர்கள் பார்த்திபன், பாலமுருகன், ராஜன், திருநாவுக்கரசு, ஞானம், துணை வட்டாட்சியர்கள் ஏழுமலை, அசோக் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.