மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், குடிநீர் விநியோகம் குறித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆய்வில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள், சாலை மற்றும் சாலை மேம்பாட்டுப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் இதரப்பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஊரகப் பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், குடிநீர் பிரச்னைகள் பெரிய அளவில் ஏற்படாமல் ஆரம்ப நிலையிலேயே தவிர்க்கவும், குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் மின் மோட்டார் பழுது, குடிநீர் குழாய் பழுது, நீர்மட்டம் கீழே செல்வது, மின் இணைப்புகள் பழுது போன்ற விவரங்களை கண்டறிந்து உடனுக்குடன் பழுது நீக்குவது, அனைவருக்கும் தடையின்றி குடிநீர் வழங்கிட வேண்டியுள்ளதால், தனிநபர்கள் எவரேனும் மோட்டார் வைத்து பொது குடிநீர் குழாய்களில் தண்ணீர் உறிஞ்சுதல், தோட்டப்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
ஆயிவின் போது, மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக்அலி பேக், ஞானசீனிவாசன், பொறியாளர்கள் கருணாகரன், குணசேகரன், நாகராஜன், வாசுதேவன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.