கள்ளக்குறிச்சி அருகே விரும்பிய பாடப் பிரிவில் பெற்றோர் சேர்க்காததால் மனமுடைந்த மாணவி செவ்வாய்க்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பைத்தந்துறை கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி, லாரி ஓட்டுநர். இவரது மனைவி சத்யா. இவர்களது மகள் சுவேதா (17).
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த இவர், பி.எஸ்ஸி. நர்ஸிங் படிக்க வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கூறியிருந்தாராம். ஆனால், போதிய பண வசதி இல்லாததால், அவரது பெற்றோர் பிஎஸ்ஸி கணிதப் பிரிவில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் திங்கள்கிழமை சேர்த்தனர். அன்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த சுவேதா, தனக்கு அந்தப் பாடப்பிரிவு பிடிக்கவில்லை. அதனால் படிப்பை தொடர முடியாது எனக் கூறினாராம். அவரை பெற்றோர் சமாதானம் செய்து வைத்தனராம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுவேதா, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.