திண்டிவனத்தில் உள்ள திருமண மண்டபங்களில் இளம் வயது திருமணம் குறித்து சனிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குழந்தைத் திருமண தடை சட்டம் 2006-இன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ செய்யப்படும் திருமணம் குழந்தைத் திருமணம். இதை விளக்கும் வகையில் திண்டிவனம் நகரில் உள்ள திருமண மண்டபங்களில், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், இளம் வயது திருமணம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகள் ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமயந்தி, சமூக நலத்துறை ஊர்நல விரிவாக்க அலுவலர் கமலாட்சி இந்த விழிப்புணர்வு வில்லைகளை திருமண மண்டபங்களில் ஒட்டினர்.
மேலும், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் அலெக்ஸ் திருமண மண்டபங்களில் உள்ள மேலாளர்களிடம், இனி வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் திருமணங்களில் மணமகன், மணமகளின் வயது சான்றிதழை அவசியம் பெற்று பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தினார்.
சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.