பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வழக்குரைஞர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியில் நடந்த பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் அருணகிரி தலைமையில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.
சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து வழக்குரைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.