விழுப்புரத்தில் செவிலிய மாணவர்களுக்கு காச நோய் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
உலக காச நோய் தினத்தையொட்டி (மார்ச் 24) , விழுப்புரம் மாவட்ட காச நோய் தடுப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காச நோய் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை பயிற்சியை தொடக்கிவைத்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் (காசநோய்) சுதாகர் பேசியதாவது:
உலகளவில் காசநோய் இந்தியாவில் தான் அதிகளவில் பரவுகிறது. மத்திய அரசு வரும் 2025-க்குள், காச நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசும் காச நோய் ஒழிப்புப் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தை காச நோய் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். காச நோயை கண்டறிய அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சளி பரிசோதனை செய்யப்படுகிறது. நோயைத் தடுக்க இலவசமாக மருந்தும், சத்தான உணவுகளும் வழங்கப்படுகின்றன.
காச நோய் அறிகுறிகளாக, தொடர்ந்து இரண்டு வாரத்துக்கு இருமல், காய்ச்சல், மார்புவலி, சளியுடன் ரத்தம் வருதல் எடை குறைதல் ஆகிய பாதிப்புகள் இருக்கும். இதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்றார்.
பயிற்சி முகாமில், தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காச நோய் குறித்த வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் கார்த்திகேயன், சுபாஷ் சந்திரபோஸ், நலக் கல்வியாளர் மகபூபாஷா, சசிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.