செஞ்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள் ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர்.
செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் செல்லும் சாலையில் உள்ள மாந்தோப்பு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருபவர் அண்ணாதுரை (50). இவர், செஞ்சி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவு நிபுணராகப் பணியாற்றி வருகிறார். இவரது, மனைவி சிவசக்தி. இவர் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் வழக்கம்போல, வெள்ளிக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுவிட்டனர். பின்னர், மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டிய நிலையில், உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. மேலும் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற தெரிய வந்தது.
இதுகுறித்து அண்ணாதுரை செஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் ஏடிஎஸ்பி. உலகநாதன், விரல் ரேகை நிபுணர் குமார் உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, போலீஸார்
விசாரித்து வருகின்றனர்.