கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் மனைவி ரோஜா (25). இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. தர்ஷினி, பிரவின் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.
மூன்றாவது பிரசவத்துக்காக ரோஜா கடந்த 19-ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 20-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொள்ள ரோஜா ஒப்புதல் அளித்தாராம். அதன்பேரில், ரோஜாவுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் ரோஜா உயிரிழந்ததாகக் கூறி, மருத்துவர்களிடம் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவரது சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.