கண்டமங்கலம் வட்டாரத்தில் நேரடி மண் மாதிரிகள் சேகரிப்பு மற்றும் மண்வள அட்டைகள் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்டமங்கலம் அருகே பள்ளித்தென்னல் கிராமத்தில் நடைபெற்ற மண் மாதிரிகள் சேகரிப்பு முகாமில், வேளாண் துறை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) செல்வபாண்டியன் பங்கேற்று, மண் மாதிரிகள் சேகரிப்பை தொடக்கி வைத்தார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. அப்போது, கோடை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள், மண்வள அட்டையின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. நடமாடும் மண் மாதிரி பரிசோதனை பேருந்து மூலம் மண் பரிசோதனை செய்யப்பட்டது. வேளாண் அலுவலர் செர்ரிகாட்மெர்சி தலைமையில் மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு செய்து அதன் அறிக்கையை விவசாயிகளுக்கு வழங்கினர்.
வட்டார வேளாண் உதவி இயக்குநர் பெரியசாமி, கோடை பருவ சாகுபடி மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். வேளாண் அலுவலர் ஜாய்சி சமித்தா, உவர் மண் சீர்திருத்தம் குறித்து விளக்கினார்.