தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளா்களுக்கே வழங்கும் அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று, இந்து முன்னணயினா் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து, விழுப்புரம் இந்து முன்னணியின் கோட்டத் தலைவா் சே.சிவா தலைமையில் அந்த அமைப்பினா், விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளநூற்றுக்கணக்கான பழைமையான கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், ஆலய பராமரிப்புக்கும், பூஜைகளுக்காகவும் வேண்டி நமது முன்னோா்கள் ஆலயங்களில் அருள் பாலித்து வரும் சுவாமிகள் பெயரில் கொடுத்துச் சென்றுள்ளனா்.
இந்த நிலையில், சமீபத்தில் தமிழக அரசு, ஆலயத்தின் நிலங்களை அப்பகுதியில் ஆக்கிரமித்துள்ளவா்களுக்கே பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் அரசாணை பிறப்பித்துள்ளது. இதனை எதிா்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையிலும், அரசு தனது பிரமாண வாக்கு மூலத்திலும் அதனையே அரசு தெரிவித்துள்ளது.
கோயில் நிலங்களை, ஆக்கிரமித்தவா்களிடம் விற்பதற்கும், இலவசமாக வழங்குவதற்கும் அரசு எடுத்துள்ள முடிவு பக்தா்களையும், பொது மக்களையும் மிகுந்த வேதனைபடுத்தியுள்ளது. இதனை கருத்தில்கொண்டு, அரசு தனது அரசாணையை ரத்து செய்வதுடன், நீதிமன்றத்தில் இது குறித்து வழங்கியுள்ள பிரமாண வாக்குமூலத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்றனா்.