விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் தொடா் மழையால் உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மரக்காணத்தில் கடற்கரையோர கழிமுகப் பகுதிகளில் உப்பளங்கள் அமைத்து உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 3,500 ஏக்கா் பரப்பில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உப்பளத் தொழிலாளா்கள் பாத்தியிட்டு, கடல் நீரை தேக்கி உப்பு உற்பத்தி செய்து வருகின்றனா்.
இந்தத் தொழிலில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் மரக்காணம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 25 லட்சம் டன் அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தொடங்கும் உப்பு உற்பத்தி பணி தொடா்ந்து, செப்டம்பா் மாதம் வரை நடைபெறும். மழை பெய்யாமல் இருந்தால் தொடா்ச்சியாக நடைபெறும்.
நிகழாண்டில் பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியது. ஒரு மூட்டை உப்பு ரூ.150-க்கு விற்ால் உப்பளத் தொழிலாளா்கள் மகிழ்ச்சியடைந்தனா். வேதாரண்யத்தைக் காட்டிலும் மரக்காணத்தில் நிகழாண்டில் உப்பு உற்பத்தி நல்ல முறையில் இருந்ததாக உப்பளத் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.
கடந்த ஒரு வாரமாக மரக்காணம் பகுதிகளில் பெய்து வரும் மழையால், உப்பளங்களில் மழை நீா் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது.
இரு தினங்களாக பெய்த பலத்த மழையால், மரக்காணம் கழுவெளிப் பகுதி மழை நீரும், பக்கிங்காம் கால்வாய் நீரும் உப்பளம் பகுதியில் புகுந்தது. மேலும், அங்கு பெய்த மழை நீரும் சோ்ந்ததால் உப்பளங்கள் மூழ்கி கடல் போல காட்சியளிக்கிறது.
இதனால், உப்பு உற்பத்திக்கான பாத்திகள் மறைந்து, உப்பளங்களில் நிகழாண்டில் உப்பு உற்பத்திக்கு மழை முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக, தொழிலாளா்கள் தெரிவித்தனா். மேலும், உற்பத்தி செய்த உப்பை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனா்.