கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டத்தில் தூய்மையே சேவை இயக்க நிகழ்ச்சி கரியாலூர் அரசு சமுதாய நல நிலையத்தில் தூய்மையே சேவை இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. மருத்துவர் கே.ராஜேஷ் தலைமை வகித்தார்.
அனைவரும் அரசு மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக பேணிக் காப்போம், குப்பையை கண்ட இடத்தில் போடமாட்டோம். முறையான இடத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட ஊசிகள், பஞ்சுகள், கண்ணாடி குழாய்களை போடுவோம். தேவையில்லாத இடங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்ப்போம், நெகிழிப் பைகளை முற்றிலும் பயன்படுத்தமாட்டோம், எனக் கூறி மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
அதே போல, மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் டி.பங்கஜம் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மருத்துவர்கள் பாலாஜி, மணிரத்னம், சித்த மருத்துவர் ரவி, செல்வம், சுகாதார மேற்பார்வையார் கே.மகாலிங்கம், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் டி.சுந்தர்பாபு, சுகாதார ஆய்வாளர் காமராஜ் மருந்தாளுநர் பி.எஸ்.மல்லிகா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.