உளுந்தூர்பேட்டை அருகே சனிக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற புள்ளி மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் கிராமத்தில் காப்புக்காடு உள்ளது. இந்தக் காட்டில் மான்கள், மயில்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த காப்புக்காட்டில் தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால், தண்ணீர் தேடி மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரங்களில் வெளியே வருகின்றன. அவ்வப்போது வரும் விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.
அதேபோல, ஆர்.ஆர்.குப்பம் கிராமம் அருகே விழுப்புரம் - சேலம் சாலையை சனிக்கிழமை அதிகாலை கடக்க முயன்ற புள்ளி மான், அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தகவலறிந்த வனத் துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்று மானின் சடலத்தை மீட்டு, உளுந்தூர்பேட்டை கால்நடை மருத்துவமனையில் உடல்கூறு பரிசோதனை செய்து, புதைத்தனர். மேலும், மானின் மீது மோதிவிட்டுச் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.