விபத்தில் உயிரிழந்த தேமுதிக பிரமுகரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி அளிப்பு
திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தேமுதிக பிரமுகரின் குடும்பத்துக்கு அக்கட்சி சார்பில் விஜய பிரபாகரன் நிவாரண உதவியை திங்கள்கிழமை வழங்கி ஆறுதல் கூறினார்.
திருக்கோவிலூரை அடுத்த டி.தேவனூரைச் சேர்ந்த தேமுதிக பிரமுகர் பழனிசாமி. இவர், மனைவி அம்சவள்ளியுடன் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மோதியதில், இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து, திங்கள்கிழமை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், கட்சியின் மாநில துணைச் செயலர் பார்த்தசாரதி, மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் ஆகியோர் தேவனூருக்கு வந்து உயிரிழந்த தம்பதியரின் சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவர்களது குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்து, தேமுதிக சார்பில் நிவாரண உதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கினர். அப்போது, ஒன்றியச் செயலர்கள் பி.மும்மூர்த்தி, ஆர்.காமராஜ், டி.சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.