விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பணி ஆணைகள் சீல் வைத்து செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3,227 வாக்குச் சாவடிகளில் வருகிற 18ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில், வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள், இதர நிலை அலுவலர்கள் மொத்தம் 15,673 பேர் பணியாற்ற உள்ளனர். இவர்கள் பணியாற்றவுள்ள வாக்குச் சாவடிகள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் இல.சுப்பிரமணியன் தலைமையில், தேர்தல் பார்வையாளர் மொகிந்தர்பால் முன்னிலையில், செவ்வாய்க்கிழமை கணினி வழியில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டன.
இந்த வகையில், 11 சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக தயாரிக்கப்பட்ட பணி ஆணைகள் சீல் இடப்பட்டு, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. இந்த ஆணைகள் புதன்கிழமை நடைபெறவுள்ள தேர்தல் பயிற்சிக் கூட்டத்தில், அந்தந்த வாக்குச் சாவடி அலுவலர்களிடம் பிரித்து வழங்கப்பட உள்ளன.