குற்றங்களைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று விழுப்புரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமால் பேசினார்.
விழுப்புரம், தந்தை பெரியார் நகரில், தாலுகா காவல் நிலையம் சார்பில் குற்றத் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலர் சபாபதி வரவேற்றார். விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் கனகேசன், உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ், விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், விழுப்புரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமால் பங்கேற்று பேசியதாவது:
விழுப்புரம் நகரில் பெருகி வரும் குற்றங்களைத் தடுக்க பொது மக்களும் காவல் துறையினருடன் ஒத்துழைக்க வேண்டும். வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த
வேண்டும். அனைத்து வீடுகளிலும் இந்த வசதியை செய்ய முடியாத நிலையில், குடியிருப்புகளின் முக்கிய சாலை சந்திப்புகளில் குடியிருப்போர் சங்கம் சார்பில் நிதி சேர்த்து கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். இதன் மூலம், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர், சந்தேக நபர்களை உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். அனைவரும் போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை இயக்க வேண்டும். மதுபோதையில் வாகனம் இயக்குவதை தவிர்க்க வேண்டும். சந்தேக நபர்கள் சுற்றித் திரிந்தால் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.