கள்ளக்குறிச்சியில் ஆளில்லாத வீட்டில் புகுந்து 10 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், விவசாயி. இவர், தனது இரண்டு பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக, கள்ளக்குறிச்சி இடையன் சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்த நிலையில், தொடர்ச்சியாக விடுமுறை நாள்கள் வந்ததால், வெள்ளிக்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு, ஏர்வாய்பட்டினம் கிராமத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டாராம்.
வீட்டில் ஆளில்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீடு திறந்து கிடப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர், உள்ளே சென்று
பார்த்தபோது வீட்டில் திருடு நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக ரமேஷுக்கு தகவல் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை ரமேஷ் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் தங்த நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரிய வந்தது.
மேலும், பக்கத்து வீடான கந்தசாமி என்பவர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் விரல் ரேகை நிபுணருடன் வந்து ஆய்வு செய்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.