சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்
விழுப்புரத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் ஒத்திகை நிகழ்ச்சியுடன் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் வியாழக்கிழமை (ஆக.15) கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில் அரசு சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பங்கேற்று, காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். காவல் துறை, மாணவர்கள் படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இவ்விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலையில் காவல் படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆயுதப்படை காவலர்கள், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் பங்கேற்று, ஒத்திகை அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணிகள் தீவிரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் வி.வி.திருமால், ஆய்வாளர் கனகேசன் ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தமிழரசன், மதிவாணன் ஆகியோர் அடங்கிய வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், விழுப்புரம் ரயில் நிலையம், ரயில்கள், பேருந்து நிலையங்களில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரயில்வே போலீஸார், பாதுகாப்புப் படை போலீஸாரும் உடனிருந்தனர். மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
பள்ளிகளில் விழிப்புணர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் சுதந்திர தின விழா தேசிய கொடியேற்றி வைத்து சிறப்பாக கொண்டாடவும், இந்த நாளில் மழை நீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுதந்திர தின வரலாற்றினை நினைவுகூரவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி சுற்றறிக்கை மூலம்
ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.