திருக்கோவிலூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி, முன்னாள் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நிகழாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதை அறிந்த, இப்பள்ளியில் கடந்த 2017-18ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்துச் சென்ற முன்னாள் மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்துச் சென்ற மாணவர்கள் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அவர்களுக்கு வழங்காமல் உள்ளது. இந்த நிலையில், புதிய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதா என ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
மாணவர்களின் போராட்டம் குறித்து அறிந்த திருக்கோவிலூர் போலீஸார், விரைந்து வந்து அவர்
களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இதுதொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். இதை ஏற்று முன்னாள் மாணவர்கள் கலைந்து சென்றனர்.