கள்ளக்குறிச்சி அருகே மளிகை பொருள்கள் வாங்கி வர கடைக்குச் சென்ற பிளஸ் 1 மாணவர் மாயமானார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பெத்தாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கனகசபை. இவரது மகன் வினோத்குமார் (16). சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் நத்தக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
கடந்த திங்கள்கிழமை (ஆக.12) பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த இவரை, பெற்றோர் சின்னசேலம் சென்று மளிகைப் பொருள்கள் வாங்கி வருமாறு ரூ.1,600 கொடுத்து அனுப்பி வைத்தனர்.
கடைக்குச் சென்ற வினோத்குமார் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை தேடிவருகின்றனர்.