பயங்கரவாதிகள் ஊடுருவல்: ரயில், பேருந்து நிலையங்களில் போலீஸார் தீவிர சோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் ரயில், பேருந்து நிலையங்களில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ரயில், பேருந்து நிலையங்களில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் ஊடுருவலையடுத்து, தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 64 இடங்களில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேக நபர்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
மாவட்டத்தில் 11 ரயில் நிலையங்கள், 20 பேருந்து நிலையங்கள், 54 கோயில்களில் போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். ரயில் நிலைய வளாகங்கள், பேருந்து நிலையப் பகுதியில் மூட்டை, பார்சல்களை மெட்டல் டிடெக்டர் கொண்டும், மோப்பநாய் உதவியுடனும் சோதனையிட்டனர்.
பயணிகள் போலீஸாரின் சோதனைக்குப் பிறகே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், விழுப்புரம் வழியாக சென்ற ரயில்களிலும் ரயில்வே போலீஸார் சோதனையிட்டனர்.
செஞ்சிக் கோட்டை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களை சோதனைக்கு பிறகே போலீஸார் அனுமதித்தனர்.
சர்வதேச நகரமான ஆரோவில் பகுதியிலும் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் தொடர் கண்காணிப்பு, சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலோரப் பாதுகாப்பு அதிகரிப்பு: மரக்காணம் முதல் புதுச்சேரி எல்லை வரையிலான கடலோர கிராமங்களில் போலீஸார் சாதாரண உடைகளில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். கடலோரக் காவல் படையினர் படகுகளில் சென்று கடல் பகுதிகளில் கண்காணித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com