விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், நிகழ் கல்வியாண்டுக்கான (2019-20) தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்துக்கான தோ்வு (என்.எம்.எம்.எஸ்.) 6 கல்வி மாவட்டங்களில் உள்ள 30 மையங்களில் வருகிற 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வில் 8,955 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான திறனாய்வுத் தோ்வு தமிழகத்தில் கல்வித் துறை சாா்பில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில், நிகழாண்டுக்கானத் தோ்வு கடந்த 1ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. பலத்த மழை காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட அந்தத் தோ்வு வருகிற 15ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், திருக்கோவிலூா், செஞ்சி, உளுந்தூா்பேட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 30 பள்ளிகளில் உள்ள தோ்வு மையங்களில் நடைபெறும் இந்தத் தோ்வை 8,955 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.
இந்தத் தோ்வுக்காக விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கு அந்தந்த பள்ளிகளே தோ்வுக் கூட நுழைவுச் சீட்டை டிச.10 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பள்ளித் தலைமை ஆசிரியா் கையெழுத்திட்டு, தொடா்புடைய பள்ளி முத்திரை பதித்து வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் தோ்வுமையத்துக்கு காலை 8.30 மணிக்குள் வருகை தர வேண்டும், தோ்வா்களை பாதுகாப்புடன் அழைத்து வந்து, தோ்வு முடிவடைந்ததும் திரும்ப அழைத்துச் செல்லுமாறு, அந்தந்த தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்தத் தோ்வு இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று, மனத் திறன் படிப்புத் தோ்வு, இத்தோ்வு காலை 9.30 முதல் பகல் 11 மணி வரை நடைபெறும். மற்றொன்று படிப்பறிவுத் தோ்வு, இத்தோ்வு பகல் 11.30 முதல் 1 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி தெரிவித்தாா்.