திருக்கோவிலூர்-கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாசிமக பிரமோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வாக, வரும் 18-ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாச்சனம், கலச ஸ்தாபனம், ரிஷபேஸ்வரர் பூஜை, பஞ்சாசன பூஜை, பஞ்சாவர்ண பூஜை, ரிஷபக்கொடி பூஜை செய்து, பிரம்மாதி தேவர்கள் ஆவாஹணம் செய்து, பலி பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, முற்பகல் 11.30 மணியளவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், இந்திராதி அஷ்டதிக் பாலகர் ஆவாஹணம் செய்து, சோமாஸ்கந்தருக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு மஹா தீபாராதனையும், இரவு 7 மணிக்கு சோமாஸ்கந்தருக்கு சோடசோபஸார தீபாராதனையும் நடைபெற்று, யாக சாலை எழுந்தருளி, புஷ்ப ரக்ஷா சமர்ப்பணம் செய்து, ஆலய வலமாக அதிகார நந்தி வாகனத்தில் கோபுர தரிசனத்துடன், சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தினர், கோயில் குருக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.