ஆயுதம் பதுக்கி வைத்திருந்ததாக தவாக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், சின்னகள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ஆறுமுகம் (39). தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகியான இவர், கடலூர் சாவடி வைஷ்ணவி தோட்டத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக டெல்டா பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைஉறுதிப்படுத்திய போலீஸார் இதுகுறித்து புதுநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வியாழக்கிழமை கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் த.கி.சரவணன் தலைமையிலான போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர்.
அப்போது, வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த 5 கத்திகள், 6 இரும்புக் குழாய்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை ஆயுதங்கள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.