விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கீழ்ப்பெரும்பாக்கம் ஊரல்கரை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் 4-ஆம் ஆண்டு மாசி மயானக் கொள்ளை விழா கடந்த புதன்கிழமை கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை கஞ்சுலி கபாலம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், ஆனந்த வரதராஜப்பெருமாள் குழுவினரின் பஜனையும் நடைபெற்றது. தொடர்ந்து, தினசரி பூஜைகளும், அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு கோயிலிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அங்காளம்மன், பாவாடை ராயன், குறவன், குறத்தி, காளி வேடங்களுடன் பக்தர்கள் வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து, மாலை அம்மன் வீதியுலாவுடன், கீழ்ப்பெரும்பாக்கம் மயானத்துக்குச் சென்று, அங்கு மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் ஆக்ரோஷத்துடன் காட்சியளித்தார். வேண்டுதலுக்காக வந்திருந்த பக்தர்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்களை சூறையிட்டு, அம்மனை வழிபட்டனர்.