விழுப்புரம் மாவட்டத்தில் பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி மார்ச் 2-ஆம் தேதி இரு சக்கர வாகனப் பேரணி நடைபெறுகிறது.
பாஜக விழுப்புரம் மக்களவைத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், விழுப்புரத்தில் சென்னை சாலையில் உள்ள தொகுதி தேர்தல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் (எஸ்.சி. அணி) ம.வெங்கடேசன் தலைமை வகித்தார்.
கோட்ட அமைப்புச் செயலர் எஸ்.குணசேகரன், தொகுதி அமைப்பாளர் வை.அருள் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
மாவட்டத் தலைவர் துரை.சக்திவேல் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலர்கள் ராம.
ஜெயக்குமார், வி.சுகுமார், இளைஞரணித் தலைவர் கோபி, வணிகரணி கோட்ட பொறுப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் சட்டப் பேரவை தொகுதிகளில், கட்சி சார்பில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்கரை ஆண்டு சாதனைகளை விளக்கி, இரு சக்கர வாகனப் பேரணி நடத்தப்படுகிறது.
மார்ச் 2-ஆம் தேதி அனைத்து தொகுதிகளிலும் நடைபெறும் இரு சக்கர வாகன பேரணியில், பாஜகவினர் திரளாக கலந்துகொண்டு, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் ஓ.பி.சி. அணி ஜெயசங்கர், நகரத் தலைவர் பழனி, எஸ்.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் ரகு, மாவட்டத் தலைவர் சதாசிவம், ஒன்றிய தலைவர் சுந்தர்ராஜ், வணிகரணி சௌந்தர், இளைஞரணி குணா, மகளிரணி சரண்யா, அலமேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.