விழுப்புரம் அருகே திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் விட்டுச் செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை சைல்டு லைன் குழுவினர் மீட்டு, பாதுகாத்து வருகின்றனர்.
விழுப்புரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருவேல்பட்டு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. அங்கு, திங்கள்கிழமை இரவு 7.30 மணி அளவில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் குழந்தை அழும் சப்தம் கேட்டது. அங்கு பணியில் இருந்த மருத்துவர், செவிலியர் சென்று பார்த்தபோது, பிறந்து ஓரிரு நாள்களேயான பெண் குழந்தை கிடந்தது.
இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பாளர் மருத்துவர் காயத்ரி, விழுப்புரம் மாவட்ட சைல்டு லைனுக்கு தகவல் கொடுத்தார். சைல்டு லைனைச் சேர்ந்த பிரசாந்த், அருள்மணி, தமிழரசி ஆகியோர் அங்கு விரைந்து சென்று, குழந்தையை பெற்றுக்கொண்டனர். அந்தக் குழந்தை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளது. குழந்தை சமூக நலத்துறையினரிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று சைல்டு லைன் குழுவினர் தெரிவித்தனர்.