மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொடர் போராட்டம்: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அறிவிப்பு

தமிழக காவிரி சமவெளிப் பகுதியை பாலைவனமாக்க முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளதாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின்

தமிழக காவிரி சமவெளிப் பகுதியை பாலைவனமாக்க முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளதாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என்.கே.நடராசன் தெரிவித்தார்.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலர்கள் கூட்டம் விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு, அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் என்.கே.நடராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகத்தில் காவிரி சமவெளிப் பகுதியை பாலைவனமாக்கும் முயற்சி, புதிய கல்விக் கொள்கை, ஒரு தேசம் ஒரு தேர்தல், ஒரே குடும்ப அட்டை போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராகவும், தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாத, மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்த அதிமுக ஆட்சிக்கு எதிராகவும், தொடர் போராட்டங்களை நடத்த முடிவெடுத்துள்ளோம். தமிழகத்தில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராகவும், நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமலும் எட்டு வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயல்கின்றனர்.
 மத்திய, மாநில அரசுகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து, காவிரி சமவெளியைப் பகுதியை பாலைவனமாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஜூலை 6-ஆம் தேதி, தஞ்சையில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
 அனைத்திந்திய கிராமப்புற தொழிலாளர் சங்கம், அகில இந்திய விவசாயிகள் மகாசபையும் நடத்தும் இந்தக் கருத்தரங்கில், மாநிலச் செயலர் தலைமையில் ஆலோசனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தவுள்ளோம். தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் கட்சியின் அனைத்து அமைப்புகள் சார்பிலும் போராட்டங்களை நடத்தவுள்ளோம்.
 கட்சியின் 50-ஆவது ஆண்டை கடைப்பிடிக்கும் விதமாக, சேலத்தில் ஜூலை 21-இல் மாநிலம் தழுவிய ஊழியர் கருத்தரங்கம், மத்தியக் குழு உறுப்பினர் அபிஜித்மஜூம்தார் முன்னிலையில் நடைபெறவுள்ளது என்றார்.
 பேட்டியின்போது, மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.பாலசுந்தரம், ஏஐசிசிடியூ மாநிலத் தலைவர் ஏ.எஸ்.குமார், அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாநில பொதுச் செயலர் அ.சந்திரமோகன், விழுப்புரம் மாவட்டச் செயலர் மா.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com