மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டிவனம் காந்தி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஆர்.பி.ரமேஷ் தலைமை வகித்தார். திண்டிவனம் நகரத் தலைவர் எம்.விநாயகம், சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ரங்கபூபதி, முன்னாள் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், மாவட்டப் பொருளாளர் கருணாகரன், வட்டாரத் தலைவர்கள் கோவிந்தன், கண்ணன், கார்த்திக், புவனேஸ்வரன், இன்பசேகர், காத்தவராயன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது,
கர்நாடகம், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில், ஜனநாயக விரோதப் போக்கை தொடர்ந்து வரும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழகத்தில் மக்கள் விரும்பாத நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் எடுப்பு உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவர முயற்சிப்பதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
நிர்வாகிகள் தினகரன், சூரியமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, வரதராஜ், பொன்.ராஜா, வெங்கட், சக்திவேல், புனிதா, லட்சுமி, முத்துலட்சுமி மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.