விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் அருகே குயிலாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரச்செல்வன்( 24), தச்சுத் தொழிலாளி. இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 பயிலும் 16 வயது மாணவியை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 29-ஆம் தேதி சின்ன கோட்டக்குப்பம் பச்சைவாழியம்மன் கோயிலில் உறவினர்கள் சம்மதத்துடன் உத்திர செல்வனுக்கும் அந்த மாணவிக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. இது குறித்து அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அதில், அவர்கள் இருவருக்கும், திருமணம் நடைபெற்று முடிந்தது தெரிய வந்தது.
இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி முருகானந்தம் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து காவல் ஆய்வாளர் துர்கா தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, மாணவியை மீட்டு, சைல்டு லைன் மூலம் அரசுக் காப்பத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.
மேலும், மாணவியை திருமணம் செய்த உத்திரச் செல்வன், அவரது குடும்பத்தினர் உள்பட மொத்தம் 5 பேர் மீது வழக்குப் பதிந்து, உத்தரச் செல்வனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதுதொடர்பாக, அவரது உறவினர்கள் விஜயகுமார், துர்கா, அரசப்பன், கலா ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர்.