செஞ்சியில் கஞ்சா விற்பனை செய்ததாக தாய், மகன்கள் உள்பட 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
செஞ்சி நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக செஞ்சி போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில், காவல் ஆய்வாளர் உலகநாதன் மற்றும் காவலர்கள் செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தேசூர்பாட்டை திருவிக வீதியில் உள்ள ஒரு காலி மனையில் ஒரு கும்பல் கஞ்சாவை பொட்டலங்களாக மடித்து விற்பனை செய்து கொண்டிருந்தது. அவர்களை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், செஞ்சி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த திருவிக தெரு பழனி மகன்கள் சக்திவேல் (19), மணி (21), இவர்களது தாய் பழனியம்மாள் (40), சிங்கவரம் சாலையை சேர்ந்த முருகன் மகன் சூர்யா(19), செஞ்சி பெரியகரம் ராஜேந்திரன் மகன் செந்தில்குமார்(23) என தெரியந்தது. இவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் சூர்யா திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்ஸி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சூர்யா மூலம் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டுள்ளதா, இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து வருகிறது என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.