விழுப்புரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமா பந்தி முகாமில், 264 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் வட்டத்தில் நடைபெற்று வந்த வருவாய்த் தீர்வாய முகாம் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டாட்சியர் பிரபுவெங்கடேசன் தலைமை வகித்தார்.
தனி வட்டாட்சியர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். வருவாய் தீர்வாய அலுவலரான, மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செ.ரகுபதி பங்கேற்று, மனுக்களை வழங்கிய பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார் (படம்).
இந்த நிகழ்ச்சியில், 42 பேருக்கு பட்டா மாற்றம் உத்தரவுகளும், கணவனை இழந்தோருக்கான மாதாந்திர அரசு உதவித் தொகைக்கான ஆணை இருவருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை 3 பேருக்கும், தற்காலிக இயலாமைக்கான பயனாளிகள் 20 பேருக்கு உதவித் தொகை ஆணைகளும், 185 பேருக்கு சிறு, குறு விவசாயிகள் சான்றுகளும், புதிய குடும்ப அட்டை 11 பேருக்கும் என மொத்தம் 264 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. துணை வட்டாட்சியர் வெங்கட்ராஜ், வருவாய் ஆய்வாளர்கள் சாதிக், திருமாவளவன், லீலாவதி, சொர்ணாம்பிகை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பிற துறை அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.