கிடப்பில் போடப்பட்ட திருத்தேர் பணி!

திருக்கோவிலூர் அருகே கிடப்பில் போடப்பட்ட நெற்குணம் வரதராஜப் பெருமாள் கோயில் திருத்தேர் கட்டமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருக்கோவிலூர் அருகே கிடப்பில் போடப்பட்ட நெற்குணம் வரதராஜப் பெருமாள் கோயில் திருத்தேர் கட்டமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள, மிகவும் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இங்குள்ள சிறிய தேருக்கு பதிலாக, பெரிய அளவிலான தேர் வைத்து விழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
 அதன்பேரில், கடந்த 2013-ஆம் ஆண்டு ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இந்தக் கோயிலுக்கு பெரிய அளவிலான திருத்தேர் கட்டமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில், முதல் கட்டமாக ரூ.8 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு, திருத்தேர் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாததால், திருத்தேர் அமைக்கும் பணி, கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
 இதன் காரணமாக, கலை நயமிக்க சிற்ப வேலைப்பாடுகளுடன் திறந்த வெளியில் கட்டமைக்கப்பட்டு வந்த திருத்தேர், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் பொலிவிழந்து வருகிறது.
 எனவே, கிடப்பில் போடப்பட்ட திருத்தேர் கட்டமைக்கும் பணியை மீண்டும் தொடங்க ஏதுவாக, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் மீதமுள்ள தொகையை முழுமையாக வழங்க அரசு இனியாவது அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் பாலமுருகனிடம் செவ்வாய்க்கிழமை கேட்டபோது, போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருத்தேர் அமைக்கும் பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com