விழுப்புரம் மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது அரசு சிற்றுந்து மோதியதில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த திருவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியன் மகன் ஜெயராமன் (58), விருத்தாசலம் அருகேயுள்ள மங்கலம்பேட்டையில் தீயணைப்பு நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர், அவரது ஊரைச் சேர்ந்த மதன் (35) என்பவருடன் கல்வராயன்மலைப் பகுதியான ஈச்சங்காடு கிராமத்தில் வசிக்கும் நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை மதன் ஓட்டினார். கல்வராயன்மலைப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, வெள்ளிமலையில் இருந்து கரியாலூர் சென்ற அரசு சிற்றுந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த ஜெயராமன் அருகே உள்ள மாவடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஜெயராமன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார்.
சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கரியாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, சிற்றுந்து ஓட்டுநர் சின்னசேலம் அருகேயுள்ள தொட்டியத்தைச் சேர்ந்த வேல்மயிலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ஜெயராமன் இந்த மாதம் ஓய்வு பெறவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.