திண்டிவனம் நகரில் கூலித் தொழிலாளியை வெட்டி கொன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணனின் மகன் வெங்கடேசன் (50). ஆட்டோ ஓட்டுநரான இவர், அந்தப் பகுதியில் உள்ள ராஜா என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். வீட்டின் உரிமையாளர் சென்னையில் வசித்து வருகிறார். வீட்டுக்கான வாடகைப் பணத்தை சேடன்குட்டை தெருவைச சேர்ந்த செல்வம் மகன் சந்திரசேகர் (42), வசூலித்து, சென்னையில் உள்ள ராஜாவுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வெங்கடேசன் வீட்டுக்குச் சென்று அவர் தர வேண்டிய வாடகைப் பணத்தைக் கேட்டாராம். அப்போது, இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டதாம். இதில், ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன், கத்தியால் சந்திரசேகரை சரமாறியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டாராம். உறவினர்கள் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சந்திரசேகர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, தப்பிச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தார். திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை கடலூர் மத்திய சிறையில்
அடைத்தனர்.