வாடகை நிலுவை: மருத்துவமனையில் ஜப்தி நடவடிக்கை
வாடகை செலுத்தாததால் விழுப்புரத்தில் தனியார் கண் மருத்துவமனை அலுவலகம் சனிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
விழுப்புரம் மந்தக்கரை பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ்(40). அரசு மருத்துவமனை சாலையில் இவருக்குச் சொந்தமான அடுக்குமாடி கட்டடம் உள்ளது. இதில், இயங்கி வரும் தனியார் கண் மருத்துவமனை நிர்வாகம் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாம்.
இந்த வாடகை நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, மருத்துவமனை நிர்வாகத்தின் மீது, இம்தியாஸ் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி சரோஜினிதேவி, ரூ.20 லட்சம் வாடகை நிலுவைக்காக, அந்த தனியார் கண் மருத்துவமனை அலுவலக பொருள்களை ஜப்தி செய்ய கடந்த 6-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ராமலிங்கம் தலைமையிலான நீதிமன்ற ஊழியர்கள் கண் மருத்துவமனை அலுவலகப் பொருள்களை சனிக்கிழமை ஜப்தி செய்து எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து கட்டட உரிமையாளரின் வழக்குரைஞர் சுப்பிரமணியம் கூறியதாவது: கட்டட உரிமையாளர் இம்தியாஸ் மூன்று தளங்களையும் கண் மருத்துவமனைக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவர்கள், கடந்த 2012 முதல் வாடகை நிலுவைத் தொகையாக ரூ.40 லட்சம் வைத்துள்ளனர். இதனால், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி, வாடகை நிலுவைத் தொகை செலுத்தாத கண் மருத்துவமனை பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்படி, பொருள்களை ஜப்தி செய்து, சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.