விழுப்புரம்: வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
இந்தச் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் முருகன் தலைமை வகித்தார். அமைப்பாளர் முருகதாஸ் வரவேற்றார்.
மாநிலத் தலைவர் விசுவநாதன், துணைச் செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுப் பேசினர்.
திமுகவுக்கு ஆதரவு: கூட்டத்தில், வரும் மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிப்பது, மேலும், அந்தக் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சென்று வாக்கு சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காகித உற்பத்தி ஆலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.